Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, May 26, 2008

மரம் வெட்டினால் இந்து(த்துவா)க்களின் மனது புண்படும்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே சேதுக்கால்வாய் பகுதியில் ராமர் பாலம் இருந்தது என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை என்றும், நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்றும் இந்துத்துவ பாஜக-அதிமுக பரிவாரங்கள் கூக்குரலிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி மநுதாரரிடம் "மரம் கூடத்தான் சிலரால் வணங்கப்படுகிறது. அதனை தெய்வம் என்றும்கூட நம்புகிறார்கள். அதற்காக இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதால் யாரும் மரம் வெட்டக்கூடாது என்று சொல்லமுடியுமா?" என்று கேட்டார். இப்படியே மதநம்பிக்கை தும்பிக்கை என்று சொல்லிக் கொண்டே கீழ்கண்டவற்றையும் தடுக்க வாய்ப்புள்ளது.

1) விநாயகரின் வாகனம் எலி என்பதால் யாரும் எலிகளைக் கொல்லக் கூடாது;
எலி மருந்து விற்பதையும் தடை செய்ய வேண்டும்.


2) விஷ்னுவின் வாகனம் பன்றி என்பதால் மூளைக்காய்ச்சல் பன்றியினால்
பரவும் என்று சொல்வதையும் தடை செய்ய வேண்டும்.


3) சிவனின் செல்லப்பிராணி பாம்பு; இனி யாரும் பாம்பை
அடிக்கக்கூடாது.



இப்படியாக கல்,மரம்,ஊர்வன,பறப்பன போக கம்பி எண்ணிய/ எண்ணப் போகும் பலரையும் தெய்வமாக நம்புவதால் அவர்களை சிறையில் அடைப்பதும், குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்வதும் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்பதால் சங்கரராமனைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக நடமாடும் தெய்வம் சங்கராச்சாரியாரை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்து மதநல்லிணக்கம் கெடாமல் காக்க வேண்டும்!

"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்"
- பாரதியார்

Monday, May 12, 2008

திராவிட நாகரிகம் வேறு! ஆரியர் வாழ்க்கை முறை வேறு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் அவர்கள் 8-2-08 தேதிய தினமணி இதழில் இந்தியப் பண்பாடு பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் தலைப்பே சாரே ஜஹான்ஸே அச்சா . . . என்பதாகும். உலகிலுள்ள அத்தனை நாடுகளிலும் சிறந்தது எங்கள் இந்துஸ்தான்(!) என்பது அந்தப் பாடலின் முதல் வரி.

உலகில் சிறந்த நாட்டை ஏன் இஸ்லாமியர்கள் படையெடுத்து அடிமைப்படுத்தினார்கள்? எப்படி இஸ்லாமியர்களால் இந்த நாட்டை 700 ஆண்டுகள் ஆள முடிந்தது? இந்தியாவை வெற்றி கொண்ட மொகலாயர்களால் துறவியர்கள் துன்புறுத்தப் பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆலயங் கள் தகர்க்கப்பட்டன என்று எழுதுகிறார். இக்கொடுமைகளை ஏன் இந்துக் கடவுள்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சோமநாதபுரம் கோயிலைப் பதினெட்டு முறை கஜினி முகமது படையெடுத்து அதன் விக்கிரகங்கள், செல்வங்களைக் கொள் ளையடித்துச் சென்றானே. ஏன் கோயிலில் வீற்றிருக்கும் ஆண்டவனால் கஜனியை அழிக்க முடியவில்லை?

இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாந்தரைப் பற்றி பெங்களூரில் ஒரு நாடகத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் பார்த்தாராம். இந்திய நாட்டுப் பண்பாட்டுச் சின்னங்களான ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, கண்ணனை நினைவூட்டும் புல்லாங்குழல் ஆகியவற்றை அலெக்சாந்தருக்குக் கொடுத்து அவற்றை விளக்கினார்களாம்!

ராமாயணமும், மகாபாரதமும் உண்மையாக நடந்த நிகழ்ச்சிகள் அல்ல; அவை பஞ்ச சந்திரம், அரேபியன் இரவுகள் போன்ற கற்பனைக் கதைகள் என்று பண்டித நேரு தாம் எழுதிய நான் கண்ட இந்தியா என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதாகக் கூறும் கற்பனைக் கதைகள் என்று நேரு கூறுகிறார்.

தசரதன் அறுபதாயிரம் மனைவியர்களைக் கொண்டிருந்தான் என்று ராமாயணம் கூறுகிறது. அது தமிழர் பண்பாடா?

சம்பூகன் என்ற சூத்திரன் தன் குலத் தொழிலுக்கு மாறாகத் தவம் செய்ததால், என் மகன் இறந்து விட்டான் என்று ஒரு பார்ப்பான் ராமனிடம் முறை யிட்டானாம். ராமன் உடனே சம்பூகன் தலையை வெட்டி விட் டானாம். பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டானாம்! இதுதான் கணேசன் புகழ்ந்து கூறும் பாரதப் பண்பாடா?

அய்ந்து சகோதரர்களுக்கு மனைவியாக இருந்த திரவுபதி எப்படி பத்தினியாக முடியும்? என்று தந்தை பெரியார் கேட்டாரே அதற்குப் பாரதீய ஜனதா கட்சி என்ன பதில் அளிக்கமுடியும்?

சிறியவனாக இருந்த போது வெண்ணெய் திருடி - பெரியவன் ஆனபோது பெண்கள் குளிக்கும்போது அவர்கள் சேலைகளைத் திருடியவனா நமது கடவுள் என்று அறிஞர் அண்ணா கேள்வி கேட்டாரே? அதற்கு இந்து மதவாதிகளின் பதில் என்ன?

பகவத் கீதையில் கண்ணன், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கூறுகிறான். இந்த நால்வகை வர்ணங்கள் தமிழர் பண்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மனித சமத்துவத்தைப் பாடினார்.

இந்தியாவை வெற்றி கொள்ள என்ன தந்திரம் கையாள வேண்டும் என்று மெக்காலே 1835 பிப்ரவலி 2 ஆம் நாள் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திட்டம் ஒன்று வைத்தாராம். இந்தியா முழுதும் மெக்காலே பயணம் செய்தாராம். ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ இந்தியாவில் அவரால் பார்க்க முடிய வில்லையாம்!

மெக்காலே இந்தியாவில் பெருநகரங்களின் மூலை முடுக்களெல்லாம் சுற்றிப் பார்த்தவரா? இன்று அமெரிக்கா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிலே கூட திருடர்கள் இருக்கிறார்கள் என்றால் அக்கால இந்தியாவில் கேட்க வேண்டுமா? அக்காலத்தில் கள்வர்கள் இருந்த காரணத்தால்தான் திருவள்ளுவர் தமது திருக்குறளில் கள்ளாமை என்ற அதிகாரத்தையே வைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

என்று எச்சரித்திருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நாட்டில் இருபது கோடி மக்கள் ஒரு வேளைக்குத் தான் உணவு பெற முடிகிறது என்று சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கூறுகிறார். மெக்காலே பயணம் செய்த காலத்தில் பசிக் கொடுமையும், பிச்சை எடுத்தலும் இல்லாமலா இருந்திருக்கும்?

இந்தியாவின் தொன்மையான கல்வி முறை, கலாசாரத்தை அழிக்காமல் நாம் இந்தியாவை முழுவதும் வெற்றி கொள்ள முடியாது என்று மெக்காலே அறிக்கை வைத்தாராம். இந்தியாவின் கல்வி முறை என்பது பார்ப்பனர்களின் ஏகபோகமாக இருந்தது அல்லவா? சூத்திர மக்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம முறை அல்லவா இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது!

டி.நோபிலி என்ற வெளிநாட்டுப் பாதிரியார் 1610 ஆம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்திருக்கிறார். மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில், கல்வி கற்று வந்த பத்தாயிரம் மாணவர்களும் பார்ப்பனராகவே இருந்ததாக நோபிலி தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்! இந்த மனுதர்ம முறையை விட ஆங்கிலேயரின் கல்வி முறை எவ்வளவோ சமத்துவத் தன்மை கொண்டதாகும்.

தமிழர் தலைவர் மானமிகு வீரமணியார் 12-1-2008 அன்று லயோலா கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவில் கிறித்தவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வியைப் பரப்புவதில் சிறப்பான தொண்டு ஆற்றி இருக்கின்றனர் என்று புகழ்ந்திருக்கிறார். (விடுதலை 4-2-08).

1901 இல் தமிழர்களில் படித்தோர் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை மெக்காலே கல்வி முறை அழித்துவிட்டது என்று கணேசன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுவதைப் பகுத்தறிவு வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இமயம் முதல் குமரி வரை இதை ஒரே நாடாக, ஒரே தேசமாக இந்தப் பண்பாடுதான் ஆக்கியிருக்கிறது என்று மிகப் பெரிய பொய்யை கணேசன் கூறியிருக்கிறார். பல்வேறு சிறு நாடுகளாக இருந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் தங்கள் படைவலிமையால் ஒரே நாடாக ஆக்கினார்கள்.

சென்ற ஜனவரி மாதம் சென்னையில் கூடிய பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது; அது நமது கலாசாரத்தைக் கெடுத்துவிடும் என்று பேசியிருக்கிறர்கள். பார்ப்பனர் கலாச்சாரம் வேறு; தமிழர்களின் நாகரிகம், பண்பாடு வேறு. தமிழர் களின் நாகரிகத்தை நாம் எதிர்காலத்திலும் போற்றிக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி - விடுதலை

Friday, March 21, 2008

ஜெர்மானியரும் பார்ப்பனரும் ஒரே ரத்தம்!

பார்ப்பனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் வந்தேறிகள்தான் என்பதை டிஎன்ஏ ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன. மைக்கேல் பம்சத் என்பவரின் தலைமையிலான ஒரு குழு இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதன் முடிவு...

மேற்கு யூரேசியப் பகுதிகளிலிருந்து இந்தியாவின் வடமேற்கு வழியாக ஒரு கூட்டம் நுழைந்து இந்தியாவின் பல பாகங்களிலும் பரவத் தொடங்கினர். அவர்கள் அங்கு ஏற்கனவே வசித்து வந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களுடன் கலந்து அல்லது அவர்களை அப்புறப்பட்டுத்தி தமது இருப்பை நிலை பெறச் செய்தனர். தொடர்ந்து அவர்கள் சாதிப் பிரிவினையை அறிமுகம் செய்து அதில் தங்களை உயர்ந்த பிரிவாக இருத்திக் கொண்டனர். இன்றைய இந்தியாவின் உயர்சாதியினரின் ரத்த டிஎன்ஏ அமைப்பு பெரும்பான்மையாக மேற்கு யூரேசியரின் டிஎன்ஏ-வோடு ஒத்துப் போகிறது.

மேலும் படிக்க..

The origins and affinities of the ∼1 billion people living on the subcontinent of India have long been contested. This is owing, in part, to the many different waves of immigrants that have influenced the genetic structure of India.

In the most recent of these waves, Indo-European-speaking people from West Eurasia entered India from the Northwest and diffused throughout the subcontinent. They purportedly admixed with or displaced indigenous Dravidic-speaking populations. Subsequently they may have established the Hindu caste system and placed themselves primarily in castes of higher rank.

To explore the impact of West Eurasians on contemporary Indian caste populations, we compared mtDNA (400 bp of hypervariable region 1 and 14 restriction site polymorphisms) and Y-chromosome (20 biallelic polymorphisms and 5 short tandem repeats) variation in ∼265
males from eight castes of different rank to ∼750 Africans, Asians, Europeans, and other Indians.

For maternally inherited mtDNA, each caste is most similar to Asians. However, 20%–30% of Indian mtDNA haplotypes belong to West Eurasian haplogroups, and the frequency of these haplotypes is proportional to caste rank, the highest frequency of West Eurasian haplotypes being found in the upper castes. In contrast, for paternally inherited Y-chromosome variation each caste is more similar to Europeans than to Asians. Moreover, the affinity to Europeans is proportionate to caste rank, the upper castes being most similar to Europeans, particularly East Europeans.

These findings are consistent with greater West Eurasian male admixture with castes
of higher rank. Nevertheless, the mitochondrial genome and the Y chromosome each represents only a single haploid locus and is more susceptible to large stochastic variation, bottlenecks, and selective sweeps. Thus, to increase the power of our analysis, we assayed 40 independent, biparentally inherited autosomal loci (1 LINE-1 and 39 Alu elements) in all of the caste and continental populations (∼600 individuals).

Analysis of these data demonstrated that the upper castes have a higher affinity to Europeans than to Asians, and the upper castes are significantly more similar to Europeans than are the lower castes.

Collectively, all five datasets show a trend toward upper castes being more similar to Europeans, whereas lower castes are more similar to Asians.

We conclude that Indian castes are most likely to be of proto-Asian origin with West Eurasian admixture resulting in rank-related and sex-specific differences in the genetic affinities of castes to Asians and Europeans.

ஆய்வு அறிக்கை

Monday, March 17, 2008

தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 2

ஆரியத்துக்கு முன் இந்தியாவின் நிலை என்ன?

அறிஞர் அண்ணா அவர்களது ஆரியமாயை என்ற தலைப்பில், (முந்தைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட நூல் இது) வெளிவந்த அறிவுக் கட்டுரைகள் ஆராய்ச்சிப் பொழிவாக மலர்ந்துள்ளது.அதில் உள்ள முக்கியப் பகுதிகள் நம் இன இளைஞர்களுக்கும், பண்பாட்டுப் படையெடுப்பை உணர்த்த வேண்டியவர்களுக்குப் பாடமாகவும் கற்றுத் தரவேண்டிய பகுதிகளை அப்படியே கீழே தருகிறோம்:

கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும் ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல, ஓர் காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.

எமைநத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்

- என்று இன எழுச்சியே உருவானது போன்ற நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்!

தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர, அந்தப்பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளிக்கிளம்புகிறது! எதிரிக்கு அடிமையாகமாட்டேன். கோடி தரினும்! என்று கூறுகின்றார். கோடி ரூபாய் - பவுன்- வைரக்-கற்கள் - நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால் சரி, வேறு பொருள் கோடி தருகிறேன் என்று எதிரிகேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான்; உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேணும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். `தொடேன் என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் மட்டுமல்ல; கருத்தினாலும் தொடேன் என்ற பொருளும் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை,

எமை நத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன்

இந்த உணர்ச்சியும், உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும், வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப்-பேச்சினை?
`நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும்
`நம்மால் ஆகுமா! என்று பேசும் தொடை நடுங்கிகளும்,
`ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளும்,
``எனக்கு இது பிடித்தமில்லை என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்-கிறோம்!

``மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!
- என்ற வீர முழக்கம், எப்போது தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், `கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழரா-யினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக்காட்டி நிற்பர்! பணிவர்!

பகைவரை அடுத்துக் கெடுத்தன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது, பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள் வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்!

ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்திகெட்ட போதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!

போதை ஏறியவன், கல்தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான். சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

`அய்யன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள், `ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள், நம்புவதில்லை. நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச்சூது, ஆரியச்சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள் என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர்.

`மழையாம் மழை மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப்பிராந்தியால் சிலர், இதுபோல ஆரியர்-திராவிடர் எனப் பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு, எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூறமுடியும்?

ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுள் கதையும் கூறிவரும்போது, அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடுகொடுக்குமா? என்பனபற்றி கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக்கொண்டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப்பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய்ப்பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, `தாத்தா இதை நான் நம்பமுடியாது என்று கூறுவதுண்டா? குழந்தைப்பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்தபோதுதான், இடிதேவன், மின்னல்மாதா, மழைமாகாளி, தீக்கடவுள் எனக் கடவுள் கதைகள் கட்டி விடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருப்பதுடன், அதே கருத்துக்களை மக்களிடைப் பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும், போதிக்கப்பட்டுவிட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்கமுடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன் ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவார்; ஆராயுந் திறனற்றாரோ, `அப்படியா! என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம், தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசங்கொண்ட வேங்கையானாலும், சதுப்பு-நிலத்திலே - படுகுழியிலே - வீழ்ந்துவிட்டால் சாகத்-தானே வேண்டும்! நீள்வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதக்குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்கவேண்டி நேரிட்டது.

``இந்தியாவில் ஆரிய ஆட்சி என்றோர் நூல், ஹாவல் (ழயஎநடட) என்பவர் எழுதியுள்ளார். அதிலே மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு மிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ, அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க-முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அற்பவிஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறிவைத்தனர்!! என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க ``மந்திரம் என்று மயக்க மொழி-பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார்? `ஆரியமாயையிலே சிக்கி நம்மவர்மீது ``துவஜம் தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா, ``வேத கால முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும் ஏமாற்றவும் ஓர் கருவியாக உபயோகப்பட்டது என்றும் ஹாவல் எழுதுகிறார்.

மந்திரம், யாகம் என்பவைகள் பார்ப்பன புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ``தாசர்கள், இந்த ஆராய்ச்சிக்காரனின் உரை கேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக்-கொள்ளக் கூடாதா? `ஆரிய ஆட்சி, ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை மனத்தினரை வாட்டிவதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன்வருவார்களா என்று கேட்கிறேன்.``கருத்து, சுருண்டு அங்குமிங்கும் அலைந்து, உன் மனதிலே அலைமோதிடச் செய்யும் அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்தரிக்கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்கமூட்டுகிறது!`வதனமே சந்திரபிம்பமோ, மலர்ந்த சரோஜமோ என்று நீ சிந்துபாடுவாயே, சற்று சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து, காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!``அந்த சிரிப்பிலே நீ சொக்குகிறாய்; அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்! அதைக்கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்துவிட்ட அவளுக்கு, நீ அடி வருடுகிறாய்! உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே, நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை, நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரிமலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்! - என்று வெளிவேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக்கொண்டு, வாஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு, விவேகமிழந்து, காமப் பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக்கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!

`அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவளிடமே சென்று அதற்கு மருந்து கண்டேன்! என்று கூறி, காமுகனாகிவிட்ட அவன், ``போடா, உலகமறியாத உன்மத்தா! நீ என்னடா கண்டாய், அந்த எழிலுடையாளின் இச்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய், நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறு-முன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படிப் பிறக்கும்? என்று, கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்-படுகிறான்.

அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான்! அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்!ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து, பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாததுகண்டு கவலைகொண்டு, `கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரைபோலாகிவிட்டதே, அய்யோ! நான் என்ன செய்வேன். கட்டு மாத்திரையால் முடியாது கத்தியே இனித்துணை என்று கூறும்போது-தான், காமுகன் கலங்கி நடுங்கி, கை கூப்பிக் கதறி, `கத்தியா என்று கேட்டுக்கூவி `கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான், கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே! என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.

அதுபோலத்தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, வாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும், அந்தச் சமயத்திலே, `சு. ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம். இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே! என்று, ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும்.

தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள், கீழே தரப்-பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ள ஆசிரியர்கள், இந்த ஆதாரங்களையும், இவை போன்ற வேறு ஆதாரங்களையும், தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்யவேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போதுதான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதிநாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்யவேண்டும்.

ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை இவைகளைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன் கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை, சரித்திராசிரியரான தோழர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-இல் பதிக்கப்பட்டுள்ள ``இந்திய சரித்திரம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

http://unmaionline.com/20071202/pa-19.html

Saturday, March 1, 2008

தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 1

"உண்மை" மாதமிருமுறை இதழில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் தொடர்.

1-ம் பகுதி

படையெடுப்புகளிலேயே மிகவும் கொடுமையான, மோசமான படையெடுப்பு, பண்பாட்டுப் படையெடுப்புதான். பல நேரங்களில் நான் இதை விளக்கியது உண்டு. அரசியல் படையெடுப்பு என்பது கைகளில் போடப்பட்ட விலங்கு; பொருளாதாரப் படையெடுப்பு என்பது கால்களில் பூட்டப்பட்ட விலங்கு. ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மனித மூளையில் போடப்பட்ட விலங்கு.

அரசியல், பொருளாதாரப் படையெடுப்புகள் கண்களுக்குத் தெரியும்; பார்ப்பவருக்கும் தெரியும். ஆனால், மூளையில் போடப்பட்ட இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கண்ணுக்கும், கருத்துக்குமே தெரியாது! உணவில் கலந்து கொடுக்கப்பட்ட - மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow Poising Drug) மருந்து, உடனடியாக ஆளைக் கொல்லாது; உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றையும் மெல்ல மெல்ல ஆனால், உறுதியாகச் செயல் இழக்கச் செய்யும். அதுபோலத்தான், இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு நமது திராவிடர் இனத்தின் மூளையை, சிந்தனையைப் பூட்டி, அதன் மொழி, கலை, நாகரிகம், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் செயல்படாது செய்ததோடு, நம் இன எதிரிகளின் மொழியை, கலைகளை, நாகரிகத்தினை நம்முடையது என்று எண்ணி அபின், கஞ்சா போதையில் உள்ளவன் எப்படி எளிதில் மீள முடியாமல் கிடக்கின்றானோ, அதுபோன்ற வீழ்ச்சி அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டு விடும்.

சுமார் 3000 ஆண்டுகாலமாக இந்நிலைதான் தமிழர் - திராவிடர் சமுதாயத்தின் கெட்ட வாய்ப்பான நிலை. பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனீயம் ஆதிக்கம் செலுத்தி வருவதன் ரகசியத்தை - தந்தை பெரியார் ஓர் அரிய சமுதாய விஞ்ஞானியாக ஆனபடியால், தமது பரிபூரண பகுத்தறிவு நுண்ணாடியால் அந்தக் கிருமிகளைக் கண்டறிந்து, நோய் நாடி - நோய் தீர்க்க முயன்றார்கள்!இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்ற சிறைக்குள் தள்ளப்பட்ட இந்த இனம், எவ்வழியாக எந்த முக்கியக் கதவு (Main gates) வழியே சிறைக்குள் சென்றதோ, அதே வழியின் மூலம்தான் வெளியே வந்தால்தான் அதற்கு விடுதலை என்று பெயர்; அந்தப் படிக்கு இல்லாமல், சுவர் ஏறிக் குதித்தோ, ஜன்னல் கம்பிகளை அறுத்தோ வெளிவந்தால் அது விடுதலையாகாது. அரசியல், பொருளாதாரத் துறையில் போராடி வெற்றி பெற்றோம் என்பது பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து விடுவதாக ஆகிவிட முடியாது. அதற்கென தனித்த பார்வை தனித்த வழிமுறைகள் இவைகளை நாம் பெற்றுப் போராடினால் ஒழிய வெற்றி பெற முடியாது!

1938 தேர்தலில் ஜஸ்டீஸ் கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்தபோது, அக்கட்சியின் மூத்த பெரும் தலைவர்கள் எல்லாம், துக்கத்தினால் துவண்டபோது, தந்தை பெரியாரைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கும்படி வேண்டி இசையச் செய்தனர். அந்நிலையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை வீச்சு முற்றிலும் அவர்கள் கருத்துக்கு மாறாக இருந்தது. 'இந்தத் தோல்விக்காக நான் வருந்தவில்லை; மாறாக, மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், நீங்கள் அரசியல் பதவிகளைக் குறி வைத்து மட்டும்தான் கட்சி நடத்தி வந்தீர்களே தவிர, ஒட்டு மொத்தமான நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் முழு உரிமையை எல்லாத் துறைகளிலும் காப்பதற்காக என்று செயல்படவேயில்லை. உத்தியோகங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துவதாக குறைபட்டு, அதை எதிர்த்துக் குறைகூறிய நீங்கள், வீட்டிற்கு வந்து அதே பார்ப்பானின் காலில் விழுந்து, உங்கள் வீட்டுக், கல்யாணம், கருமாதி போன்ற சடங்கு சம்பிரதாயங்களால் பார்ப்பனர் தம் ஆதிக்கத்தினை காலங்காலமாகப் பாதுகாக்கும்போது, அவர்களுக்கு என்ன குறைச்சல் ஏற்படும்? எவை அதை ஒழித்துக் கட்டி ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட்டாலொழிய நம் மக்களுக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படவே ஏற்படாது' என்றார்கள். ஆரிய மாயை என்ற அற்புதமான நூலில் அறிஞர் அண்ணா விளக்கியுள்ளார் மிகவும் விரிவாக அதை அடுத்த இதழில் ஆராய்வோம்.

நன்றி: உண்மை ஆன்லைன்