Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Sunday, May 11, 2008

இந்து மதத்தை ஒழிப்பதுதான் ஒரே வழி: புனிதபாண்டியன்

தலித் மக்களின் பிரச்சினைகளுக்காக கடந்த 12 வருடங்களாக ஊடக தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ‘தலித் முரசு’ பத்திரிக்கை ஆசிரியர் புனிதபாண்டியன். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘தலித் முரசு’ தன் பாதை மாறாமல் தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர். ‘கீற்று’ இணையதளத்திற்காக அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..

மாணவர்களிடையே ஈழப் பிரச்சினையின் தாக்கம்:

"...பொதுவாக சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் அநியாயத்தை எதிர்த்துப் போராடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நான் மாணவராக இருந்ததில் இருந்து, இதுவரை அப்படி எந்த மாணவர் குழுக்களும் சமூக மாற்றத்திற்காக இங்கே போராடி வெகுண்டெழுந்ததாக நான் பார்த்ததில்லை. வகுப்பை மட்டம் போடுவதற்கான ஒரு வாய்ப்பாகவே மாணவர்கள் இங்கே போராட்டங்களைப் பார்த்தார்கள். இதே நிலைமைதான் அப்பொழுதும் ஈழப்போராட்டத்திற்கும் இருந்தது. என் கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியர் மட்டும் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். திராவிட கழகங்கள், சில அமைப்புகள் பிரச்சினைகளை முன்வைப்பார்கள். அதிலுள்ள மாணவர்கள் எங்கள் கல்லூரிக்கு வந்து ஆதரவு கேட்பார்கள். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கமாட்டார்கள்...."

தலித் அரசியல்:

"...தமிழக சட்டப்பேரவையில் தற்போது 42 தலித் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதன்பிறகும், ‘தலித்துகள் அரசியல் சக்தியாக மாறும்போது தான் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும்’ என்று திருமாவளவன் கூறுகிறார். தலித்துகள் முக்கியமான அமைச்சர் பொறுப்புகளை வகித்தாலும் திருமாவளவன் இதையே தான் கூறுவார். அப்படியானால் அவர் முதல்வராக ஆக வேண்டும். அவர் முதல்வராக ஆக முடியுமா? அப்படியே ஆனாலும் தலித் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று யோசிக்க வேண்டும். இதற்கெல்லாம் பதில் இல்லாதபோது, தலித் அரசியல் என்பதில் போய் ஏன் விழவேண்டும்? ..."

மதமாற்றமும் தலித் முன்னேற்றமும்:

"...தலித்துகள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு நிலம் அவசியம் என்பதால் தான் நிலப்பங்கீட்டை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கயர்லாஞ்சியில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நில உடைமையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் நிலப்பங்கீடு தவறு என்று சொல்லிவிட முடியாது. தலித் கிறிஸ்தவன் தலித் இந்துவை விட மிகமிகக் குறைந்த அளவிலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான். வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது முதல் வழி. அதன்பிறகு இழிவை நீக்குவது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம்..."

இந்து மதத்தில் பெண்கள்!

"...ஒன்றை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை என இந்து மதம் போல வேறு எந்த மதமும் பெண்களை அடக்கி ஒடுக்கியதில்லை. இந்து மதத்தை எந்த மதத்தோடும் ஒப்பிடவே முடியாது. இந்து மதம் ஒரு மதமே அல்ல என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். வேறு எந்த மதத்திலும் தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்ள முடியும். இந்து மதத்தில் அது முடியாது. மற்ற மதங்களில் ஒரு ஜனநாயகத்தன்மை இருக்கிறது. இந்து மதத்தில் அது கிடையாது..."

அம்பேத்கர் தலித் தலைவரா?

"...ஒரு பார்ப்பனர் டாக்டராக இருந்தால் இந்த சமூகம் அவரை ஒரு மிகப்பெரிய டாக்டர் என்று குறிப்பிடுகிறது. ஒரு கவிஞர் பார்ப்பனராக இருந்தால் அவரை தேசியக் கவி என்று கொண்டாடுகிறது. பாரதிதாசன் பார்ப்பனர் அல்லாத காரணத்தினால் அவர் ஒரு தேசியக் கவி கிடையாது. பாரதியார் ஒரு மாநிலத்தில் பிறந்து ஒரே ஒரு மொழியில் மட்டுமே எழுதினாலும் அவர் தேசியக் கவியாக கொண்டாடப்படுகிறார். இதனால் தான் மகாத்மா காந்தி தேசப்பிதாவாக ஆகி, அம்பேத்கர் தலித் தலைவராக சுருங்கி விட்டார். இப்படி தலித் விஷயங்கள் தலித்துகளாலேயே சுருக்கப்பட்டு விட்டது..."

போராட்ட எல்லைகள்!

"...நாம் நடக்கும் சாலையில் ஏன் ஒருவர் மட்டும் செப்டிங் டேங்க் கழுவ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். மலத்தை வாயில் திணிப்பது தவறில்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறுகிறார். ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? என்பது மாதிரியான கேள்விகள் தலித்துகளுக்கு மட்டுமோ, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமோ எழ வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் எழ வேண்டும். இந்த சீர்திருத்தத்திலும் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டு, நீ தலித்துக்காக போராடிக்கொள், நான் பிற்படுத்தப்பட்டோருக்காக போராடிக் கொள்கிறேன், என் போராட்ட எல்லை இதுவரை தான், உன் போராட்ட எல்லை அதுவரை என்று பேசுவது அயோக்கியத்தனம்."

நேர்காணலை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.

நன்றி: கீற்று.காம்

Wednesday, March 12, 2008

“யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008

நன்றி: தலித்முரசு