Sunday, February 24, 2008

தீண்டத்தகாதவர்கள் சொர்க்கம் செல்வது எப்படி?

மனிதர்களை நான்கு வருணமாக பிரித்தது போதாமல், நான்காவது வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியையும் மனுசாஸ்திரம் குறிப்பிடுகிறது.

தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)
இவர்கள் வாழும் இடமாக ''இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்'' (10 : 50)

சண்டாளர்கள் எனப்படும் இந்தப் பிரிவினருக்கு மிகவும் இழிவான கட்டுப்பாடுகளையும் மனுசாஸ்திரம் விதிக்கிறது.

''ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது'' (10 : 52)

''இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும்'' (10 : 52).

''நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்'' (10 : 53).

''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).

''அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்'' (10 : 55).

''மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்'' (10 : 56).

இந்த மக்கள் சொர்க்கம் போவதற்கு என்ன வழி? அதையும் மனுசாஸ்திரம் சொல்லுகிறது.

''அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு'' (10 : 62).

இங்கே கூட 'கூலி இல்லாம உயிர்த்தியாகம் செய்' என்று சொல்றாம்பாருங்க, அங்கேதான் நிற்கிறான் பார்ப்பான்.

நன்றி: ஆலமரம்

http://aalamaram.blogspot.com/2007/02/blog-post_28.html

No comments: